Sunday, May 1, 2011

தெளிவு

தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவசங்கள் தருவதில் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஒரு சாதனை படைத்தது மதுரை மாவட்டத்தில் நடந்த ஒர் இடைத்தேர்தல். அந்த மாவட்டதில் தற்பொழுது நடந்த பொதுதேர்தலை எந்தவித சட்டவிரோதமான நடவடிக்கைகளும் இல்லாமல் நடத்தி தமிழகத்தின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் தற்போதைய மதுரை ஆட்சியர் திரு.சகாயம்.

சமீபத்தில் மதுரை ரீடர்ஸ க்ளப் கூட்டத்தில் அவரது உரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. திறமையான அதிகாரி என்பதோடு மட்டும் அல்லாமல் நல்ல பேச்சாளராவும் (Orator) உள்ளார். நிறைய மேற்கோள்கள் கூறினார். அரசு பணியில் தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அதில் ஒரு நிகழ்ச்சி:

"நான் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி கொண்டிருந்தேன். ராசிபுரத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றுகொண்டிருந்தேன். நெடுஞ்சாலையில் என் வாகனத்திற்க்கு முன்பாக இரண்டு வாலிபர்கள் சாலையில் தாறுமாறாக பைக் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். மது அருந்திவிட்டு ஒட்டுகிறார்களா என்று நினைத்தேன். அவர்களை நிறுத்தி உதவியாளர்களைவிட்டு சோதிக்க செய்தேன். நினைததுப்போல் மது அருந்தியிருந்தனர். மேலும், ஓட்டுநர் உரிமமும் இல்லை. சம்மந்தபட்ட அதிகாரியை தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க சொண்ணேன். இருவரும் கெஞ்சினர். நான் விடாப்பிடியாக இருந்தேன். சட்டென்று ஒருவன் தன் பையிலுருந்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து என் கையில் திணித்து 'ஐயா எங்களை விட்டுவிடுங்கள்' என்றான்! ஆக எப்படி இன்றைய சூழல் உள்ளது என்று பாருங்கள்."

அவர் இந்த நிகழ்ச்சியை சற்று வேடிக்கையாகதான் விவரித்தார். ஆனால், சற்று யோசித்தோம் என்றால் நம் எல்லோரிடமும் இந்த மனபாண்மை உள்ளது தெரியும். காசிருந்தால் இந்த நாட்டில் எதையும் செய்யலாம் என்ற அதீத நம்பிக்கை. எதையும் மீறலாம் என்ற தைரியம்.

குடி போதையிலேயே இந்த தெளிவு இருக்கும்போது, தெளிவாக இருக்கும் போது.... யோசிக்கவே முடியவில்லையோ!!!!