Monday, February 13, 2012

காதலர் தின சிறப்பு ஏற்பாடுகள்

’எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்குமோ என்ற ஏக்கமோ வாட்டமோ இல்லாமல் நிகழ்கால விளையாட்டுக்களில் கவலையற்று ஈடுபடிட்ருந்த பச்சிளம் பருவம். அந்த பருவம் மனிதனால்  மற்றோரு முறை சந்திக்கக் கூடிய பருவமா?’ - சிறு வயது பிராயம்பற்றி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் கருணாநிதி. ஆனால், சென்னையில் பதினைந்து வயது பள்ளி மாணவன் அவனை கண்டித்த ஆசிரியை ஒருவரை குத்தி கொன்றுள்ள சம்பவம் குழந்தைகள் அப்படி ஒரு சுழலில் வளரவில்லை என்கிறது. இது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்று ஒதுக்கிவிட முடியாது. பெரும்பாலான குழந்தைகள் ஏதோ ஒரு நெருக்கடி அல்லது நிர்பந்ததுடன்தான் வளர்கின்றன. பெற்றோர்கள் வளரும் குழந்தைகளிடம் வைக்கும் அதீத எதிர்பார்ப்புதான் இதற்கு முக்கிய காரணம். உறவினர் பிள்ளை அல்லது பக்கத்து வீட்டு பிள்ளையைவிட அதிகம் படிக்க வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும், நிறைய சாதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. வளரும் பருவத்திலேயே பெரியவர்களுக்கு உள்ள அதே மன அழுத்தம் குழந்தைகளுக்கும். நம்மிடம் உள்ள போட்டி, பொறாமை, வன்மம் ஆகியவற்றை நம்மையும் அறியாமல் குழந்தைகள் மனதில் விதைக்கிறோம். குழந்தைகள் குழந்தைகளாக வளர விடப்படவில்லை. Thats the regret.

                                                                                      o0O0o

சோ ராமசாமி தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் (அரசியல் தரகு வேலையும் உண்டு, இதனை அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் ஒப்பு கொண்டுள்ளார்). சமீபகாலமாக அளவுக்கதிகமாக ஜெயலலிதாவின் புகழ் பாடிகொண்டிருக்கிறார். இந்த வாரம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்க்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராகும் சிறப்பு வழக்கறிஞரை ராஜினாமா செய்ய கர்நாடகா பாஜக அரசு நெருக்கடி கொடுத்துள்ளது. இவர் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்டவர் என்பதினால் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். பதிலாக கர்நாடகா அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்து, நீதிமன்றம் அவர் மேல் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றியுள்ளார். சோ ராமசாமி இந்த விவகாரதிற்கு என்ன வியாக்கியானம் கொடுக்கிறார்?

                                                                                       o0O0o
 
மதுரை சுற்றுசுழல் பூங்கா.  வாக்கிங் செல்வது மற்றும் குடும்பத்துடன் பொழுதுப்போக்க வருவது என மதுரைவாசிகளின் பல தேவைகளை இப்பூங்கா பூர்த்தி செய்கிறது. இப்படி வருவோர்களில் நானும் ஒருவன். இந்த பூங்காவிற்கு மற்றுமொறு பெருமை உண்டு - காதலர்களின் சரணாலயம். இங்கு வருவோர் எவரையும் எந்த சட்டையும் செய்யாமல் தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் பல இளங்ஜோடிகளை இங்கு காணலாம். இந்த முக்கிய ஸ்தலதிற்கு காதலர் தினத்தை முன்னிட்டு மதுரை மாநகராட்சி என்ன சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் அன்றைய தினம் காதலர்களுக்கு மட்டும்தான் அனுமதி என்று அறிவிக்கலாம். எப்பூடி? மாநகராட்சி அறிவிக்கிறதோ இல்லையோ அடுத்த ஒரு வாரத்திற்கு நான் அங்கு செல்வதாக இல்லை. இளம் ஜோடிகளை தொந்தரவு செய்யவேண்டாம் என்றுதான்.