Sunday, October 23, 2011

சாமானியனின் பொருளாதாரமும் ஜனநாயகமும்

இந்தியா சுதந்திரம் அடைந்து இந்த 63 ஆண்டுகளில் அதன் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி குறிப்பிடதக்க முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது உண்மைதான்.

ஆனால், பொருளாதார தாராளமயமாக்குதலுக்கு (Economic Liberalization) பின் ஏற்ப்பட்டுள்ள வளர்ச்சியானது சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்களை முழுதுமாக சென்றடையவில்லை. இந்த வளர்ச்சி நடுத்தர மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் அதே நேரத்தில் இந்தியாவின் கணிசமான வறுமையை மறைக்கவும் செய்கிறது.

உலக வங்கி கணக்குப்படி நம் மக்கள் தொகையில் 42% வறுமை கோட்டின்கீழ் வாழ்கின்றனர். வேலை வாய்ப்பு என்று வரும்போது முறைசாரா துறையில்தான் (Unorganized Sector) 92% பணியாற்றுகிறார்கள்.  ஆக, தரமற்ற வேலை வாய்ப்பினால் வேலையிண்மையைவிட வறுமை அதிகம் உள்ளது.

மனித மேம்பாட்டு குறீயிடு (Human Development Index) பட்டியலில்169 நாடுகளில் இந்தியா 119-வது இடத்தில் உள்ளது. குறிப்பாக அடிப்படை மருத்துவம் மற்றும் கல்வி வசதியில் இந்தியா மிகவும் பின் தங்கிய்ள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 46% ஊட்டச்சத்து குறைவுடன் உள்ளன.  கர்ப்பினி மற்றும் தாய்மார்களுக்கும் இதே நிலைதான். ஆரம்ப கல்வியை பொறுத்தவரையில் மாணவர்களின் சேர்க்கை 95% -ஆக இருந்தாலும், சுமார் 48% எட்டாம் வகுப்பு வரும் முன்னரே படிப்பை விடுகின்றனர்.

மேலே உள்ள புள்ளிவிவரம் நம்முடைய பொருளாதார மேம்பாடு நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் உட்படுத்திய ஒரு வளர்ச்சியாக (Inclusive Growth)  அமையவில்லை என்பதனை தெளிவாக்குகிறது.

சமூக, பாலின மற்றும் பிராந்திய ஏற்றதாழ்வுகள், கிராமபுற/நகர்புற வேறுபாடுகள், சொற்ப மனித மேம்பாடு, தரமற்ற வேலை வாய்ப்பு, விவசாய வளர்ச்சியில் தேக்கம் போன்றவற்றினால் நம் மக்கள்தொகையில் ஒரு பெரும் பகுதி இந்த வளர்ச்சியிலுருந்து விடுப்பட்டவர்களாய்தான் உள்ளனர்.

இப்படியான ஒரு வளர்ச்சியினால் சமூகதில் அமையிதின்மை (Social Unrest) எற்பட வாய்ப்புகள் அதிகம்.

8% அல்லது 9% வளர்ச்சியைவிட அனைத்து தரப்பினரையும் உட்படுத்திய வளர்ச்சியை அடைவது என்பது ஒரு சவால்தான். ஆனால், ஒரு நிலையான ஜனநாயக சமூக அமைப்பிற்க்கு (Stable Democratic Society) அனைத்து தரப்பு மக்களையும் உட்படுத்திய ஒரு வளர்ச்சி மிக அவசியம்.  

இல்லாவிடில், ஜனநாயகத்தில் சாமான்யனின் பங்களிப்பு என்பது கேள்விகுறியாகிவிடும்.

Sunday, October 9, 2011

ஃபேமிலி ரூம்

குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வர் பொறுப்பேற்று பத்தாண்டுகள் ஆகிறது.  இந்த 'சாதனை'யை அவரது ஆதரவாளர்கள் பெருமையுடன் பறைசாற்றி கொண்டிருகிறார்கள்! இந்தியாவிலேயே மிக 'திறமை'யான முதல்வர் அவர்தான் என்கிறார்கள்!! தொடர்ந்து பத்தாண்டுகள் முதல்வராய் இருப்பது ஒரு சாதனைதான். ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன் அவர் அரசாங்கம் செய்த ஒரு காரியம் அவரின் திறமையை சந்தேகிக்க வைக்கிறது - குஜராத் கலவரத்தில் முதல்வர் மோடிக்கு தொடர்பு உள்ளது என்று கூறி அதற்கான சில ஆதாரங்களையும் வெளியிட்ட சஞ்சீவ் பட் என்ற போலீஸ் அதிகாரியின் கைது. இந்த கைது சம்பவத்தைவிட அதற்கான காரணம்தான் மோடி அரசின் திறமையை குறைக்கிறது! அந்த அதிகாரி அவருக்கு கீழ் பணிபுரிந்த காவலர் ஒருவரை மிரட்டி தனக்கு சாதகமாக வாக்குமூலம் வாங்கினார் என்ற குற்றசாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எப்படியும் அந்த அதிகாரி ஜாமீனில் வந்துவிடுவார். கைது செய்து என்ன பயன்?  மோடியை பாரதீய ஜனதாவின் தோழமை கட்சிகளின் முதல்வர்களே அவர்களின் மாநிலத்தில் நுழைய அனுமதி மறுக்கும்போது தன் பதவியேற்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்த நம் ‘தைரியலெட்சுமி’ தமிழக முதல்வரிடம் அவர் யோசனை கேட்டிருக்கலாம். இந்நேரம் அந்த அதிகாரி மீது கஞ்சா வழக்கு அல்லது குண்டர் தடுப்பு சட்டம், முடிந்தால் இரண்டும் சேர்ந்தே பாய்ந்து இருக்கும்.

*****

சென்ற வாரம் திருநெல்வேலி விஜயம். வேலை முடித்து திரும்பும் வழியில் சாத்தூரில் மதிய உணவிற்காக நிறுத்தினோம். எங்கு நல்ல உணவு கிடைக்கும் என்று நாங்களே அனுமானித்து ஒரு ஓட்டலில் நுழைந்தோம். அப்போது மணி சுமார் நான்கு. மாலை சிற்றுண்டிக்கான நேரம். ஓட்டலில் திரும்பிய பக்கமெல்லாம் வடையும் ஆவி பறக்க டிக்காஷன் காபியும். அநேகமாக பலருக்கு அது ஒரு தினசரி கடமைப்போலும். ஓட்டலில் கவனத்தை கவர்ந்த மற்றுமொரு விஷயம் ஃபேமிலி ரூம்! நாங்கள் சென்ற சமயம் ஃபேமிலி ரூமில் ஒரு குடும்பம் இரு குழந்தைகள் சகிதம் உணவு அருந்தி கொண்டிருந்தது.  சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைகழகத்தில் படித்த காலத்தில் வாடிக்கையாக செல்லும் அசைவ ஓட்டல் ஒன்றில் இதே போல் ஐந்து ஃபேமிலி ரூம்கள் உண்டு. ஆனால், ஒரு நாள்கூட அதில் ஃபேமிலிக்களை பார்த்ததில்லை! எப்பொழுது சென்றாலும் எல்லா ரூம்களிலும் நான்கைந்து பேர் மது அருந்தி கொண்டிருப்பார்கள்!! ஓட்டல் நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்களை கவனித்துவிடுவதால் ’குடி’மக்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. நிம்மதியாகவும் செளகரியமாகவும் அவர்கள் காரியத்தை முடித்து கொள்ளலாம். நானும் நண்பர்கள் சகிதம் அடிக்கடி அங்கு செல்வது அந்த ஒரு ’திருப்பணி’க்காகதான். இப்போதெல்லாம் தெருமுனை ஒயின் ஷாப் முதல் நட்சத்திர ஓட்டல்வரை மது அருந்துவதற்கான இடம் மற்றும் இதர வசதிகள் பெருகிவிட்டது. அதனால் அசைவ ஓட்டல்களில் ஃபேமிலி ரூம்களுக்கான தேவை குறைந்துவிட்டதா அல்லது பயன்பாடு மாறிவிட்டதா?!? 

Sunday, October 2, 2011

மகாத்மா

இன்று மகாத்மா காந்தியின் 142-வது பிறந்த நாள். அவர் சமாதி மற்றும் இதர நினைவிடங்களுக்கு தலைவர்கள் விஜயம், நாடெங்கும் அவர் சிலைகளுக்கு மாலை, பிரார்த்தனை கூட்டங்கள் என்று வழக்கமான சடங்குகள்! (இதில் உண்மையாகவே அவர் மீது ஈடுபாடுடன் அவர் நினைவை கொண்டாடுபவர்களும் உண்டு.) இந்த சடங்குகளில் ஒன்று, பத்திரிக்கைகள் மற்றும் இணையத்தில் அவரை போற்றியும் அதற்கு சமமாக வசைபாடியும் வெளிவரும் கட்டுரைகள்.

ஒரு தலைவைரை பற்றியோ அல்லது அவரின் கருத்துக்களை பற்றியோ பலவித கருத்துக்கள் இருப்பது சகஜம். ஆனால் அவரை மகாத்மா என்று அழைப்பதே தவறு என்று சிலர் வாதிடுகின்றனர்.

அதற்கு அரசியல்ரீதியான காரணங்கள் முன் வைக்கபடுகிறது! இங்குதான் முரண்பாடே.

அரசியல் செயல்பாடுகள் என்று வரும்பொழுது எந்த தலைவரும் எந்நேரமும் எல்லோரையும் திருப்திப்படும்படியான முடிவுகளை எடுத்துவிட முடியாது. அவருடன் அரசியலில் முரண்பட்டவர்கள் ஏராளம். அவரும் பல நேரங்களில் தவறான அரசியல் நிலைபாடினை எடுத்துள்ளார். ஆனால் ஒர் நேர்மையான அரசியலுக்கு முயற்ச்சித்தார்.

மகாத்மா என்று அவர் போற்றப்பட்டதற்கு அவரின் நேர்மையான அரசியல் வாழ்க்கை எப்படி ஒரு முக்கியமான காரணமோ அதைப்போல் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் மிக முக்கிய காரணம். ஒழுக்கமான வாழ்வினை வாழ அவர் எடுத்த சிரத்தைகள் மற்றும் ஒளிவு மறைவு இல்லாத உண்மையான தனி மணித வாழ்க்கைத்தான் எல்லோராலும் அவர் மகாத்மா என்று போற்றப்பட்டதற்கு முக்கிய காரணம்.

இன்று ட்வீட்டரில் பார்த்தது - காந்தி சாமான்ய மக்களின் கதாநாயகன். ஆம் அறிவுஜீவிகளால் பலமாக விமர்சனம் செய்யப்பட்டபோதிலும் சாமான்யர்களுக்கு அவர் கதாநாயகன்தான்.