Sunday, September 15, 2013

வெள்ளையம்மாளின் மரணச்செய்தி

நாட்டின் தலைநகரில் சில மாதங்களுக்கு முன் ஓடும் பேருந்தில் இளம்பெண் கற்பழிப்பு மற்றும் கொடூர தாக்குதல், சம்பவம் நடந்த சில தினங்களுக்கு பின் அந்த பெண் மரணம், இக்கொடும் செயலில் ஈடுப்பட்ட அனைவரும் துரிதமாக கைது செய்யப்பட்டு நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சமூகத்தின் விளிம்பில் வாழ்பவர். சமீபத்தில் மும்பையில் நடந்த கற்ப்பழிப்பு வழக்கிலும் குற்றவாளிகள் அனைவரும் அதே நிலையில் உள்ளவர். இந்த ஒற்றுமை குற்றவாளிகள் உருவாவதற்க்கு அவர்கள் வாழும் சூழலா, வளர்ந்த விதமா போன்ற விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணுரிமை பற்றி ஒரு சாரார் வாதிட்டால் மற்றொரு பக்கத்தில் அவர்கள் உடுத்தும் உடை சம்மந்தமான அறிவுரை வழங்கபடுகிர்து!  இதில் கடைசியாக சேர்ந்திருப்பது குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை பற்றிய விவாதம்! டெல்லி சம்பவதில் அனைவரின் குற்றங்கள் நிருபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஒருவர் சிறுவர் என்பதால் சிறார் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார். (ஒருவர் வழக்கு நடைபெறும்பொழுது தற்கொலை செய்துகொண்டார்) மற்ற அனைவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இப்பொழுது மரண தண்டனைக்கு எதிரான குரல்கள். மரண தண்டனை தேவையா இல்லையா என்ற விவாதங்கள் ஒருப்புறம் இருக்கட்டும், சட்டத்தில் அதற்கான இடம் இருக்கும்வரை அதனை பிரயோகிப்பதில் என்ன தவறு? இதையெல்லாம் தாண்டி இந்த வழக்கு மேல் முறையீட்டிற்க்கு வரும்பொழுது இது ஆயுள்தண்டனையாக  குறைக்கப்பட வேண்டும் என்று இந்து நாளிதழ் நீதிமன்றத்திற்கு அறிவுரை வழங்கியுள்ளது!!! இப்படியாக, என்ன குற்றத்திற்கு என்ன தண்டனை என்று நீதிமன்றத்திற்கு வெளியே எல்லோரும் முடிவு செய்ய ஆரம்பித்துவிட்டால் சமூகத்தில் குற்றங்கள் குறையுமா? கூடுமா?

 o0O0o

தஞ்சை பெரிய கோயிலில் சுமார் 33 ஆண்டுகளாக பக்தர்களையும் சுற்றுலா பயணிகளையும் ஆசிர்வதித்து, வரவேற்று, மகிழ்வித்த ‘வெள்ளையம்மாள்’ என்ற 63 வயது யானை நேற்று மரணம் அடைந்தது. ஏழு ஆண்டுகளுக்கு முன் முழங்கால் வலியால் பாதிக்கப்பட்டது. ஆனால், வெள்ளையம்மாள் தன் கடமையை ஒரு நாள்கூட தவறவில்லை. தஞ்சை மக்கள் பலருக்கு ஒரு உறவை இழந்த உண்ர்வு. மாவட்ட ஆட்சியரில் ஆரம்பித்து அஞ்சலி செலுத்துவதற்க்கு பெரிய கூட்டம்.  கோயிலுக்கு வரும் பெரியவர் முதல் சிறியவர் வரை அதனிடம் ஆசிர்வாதத்திற்க்கு நிற்கும் நீண்ட வரிசை; அதன் முதுகில் ஏற்றபடும் குழந்தைகள்; அதனருகில் நின்று புகைப்படம் எடுத்துகொள்ளும் நபர்கள்; அன்புடன் வழங்கப்படும் உணவுபண்டங்கள்; அருகில் சென்றவுடன் வீறிட்டு அலறும் குழந்தைகள்; இப்படியாக அந்த இடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். நான் அந்த கோயிலுக்கு செல்லும்போதெல்லாம் அங்கு சிறிது நேரம் இதனை வேடிக்கை பார்ப்பது வழக்கம். இச்செய்தியினால் எனக்கு பல சிறு வயது ஞாபகங்கள்! வருத்தமும்தான்.

o0O0o


இரண்டு தினங்களுக்கு முன் பாரதீய ஜனதா நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு ஆர்எஸ்எஸின் ஆசிர்வாததுடன் ஏகப்பட்ட திரைமறைவு வேலைகள். இந்த அறிவிப்பு பாஜாகவையும் அதன் பிரதமர் வேட்பாளர் மோடியையும் அரியனையில் ஏற்றுமா என்பது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் கட்சியின் வளர்ச்சிக்கு வித்திட்ட அத்வானியின் அரசியல் வாழ்க்கையை இது முடித்துவிட்டது. இருபத்தி மூன்று வருடங்களுக்கு முன் அவர் நடத்திய ரத யாத்திரை பாஜாகவின் அரசியல் வளர்ச்சியில் ஒரு மைல்கல். அது அக்கட்சி ஆட்சியில் அமர்வதற்கு வழிவகுத்தது. இந்த காலகட்டதில்தான் அவர் மகாஜன், சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி, வேங்கையா நாயுடு, உமா பாரதி போன்ற இரண்டாம் நிலை தலைவர்களை வளர்த்தார். இந்த பட்டியலில் நரேந்திர மோடியும் அடக்கம்! ஆட்சியில் அமர்வதற்க்கு கூட்டனி அமைவதற்க்காக மற்ற கட்சிகள் ஏற்றுக்கொள்ளகூடிய மிதவாத முகம் கொண்ட வாஜ்பாயை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினார். இப்போழுது நிலவும் சூழ்நிலையில் மோடியைவிட தான் ஒரு மிதவாதி என்று நம்பினார். எப்படியும் இந்த முறை வாய்ப்பை கைப்பற்ற எல்லா முயற்சியும் செய்தார். ஆனால், மோடி அவரை மிஞ்சிவிட்டார். வளர்த்த கடா மாரில் பாய்ந்துள்ளத்து. கவுண்டமனி பாஷையில் “அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்மப்பா”