Monday, May 26, 2014

பங்காளி சண்டை

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிபெண்கள் பிரம்பிப்பூட்டுகின்றன. முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 450-க்கும் அதிகம். தேர்ச்சி விகிதம் சுமார் 90 சதவிதம். இது ஒருபுறம் சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்றாலும், தமிழகத்தில் கல்வி மேலாண்மை சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வி எழும்புகிறது. ”இதே நிலை நீடித்தால் அனைவரும் 500க்கு 500 பெற்றாலும் ஆச்சரியமில்லை. திறமையான மாணவர்களை குலுக்கல் முறையில் தான் தேர்தெடுக்க வேண்டும்” என்று கல்வியாளர்கள் ஆதங்கப்படுகின்றனர். தமிழகத்தைவிட தேர்ச்சி விகிதம் குறைவாகவுள்ள கேரள மற்றும் ஆந்திர மாநிலங்களில் மாணவர்கள் அகில இந்திய அளவிலான தேர்வுகளில் அதிக அளவில் வெற்றி பெறுகின்றனர். மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் தமிழக மாணவர்கள் அகில இந்திய நுழைவுத்தேர்வுகள், ஐஏஎஸ்., போன்ற தேர்வுகளில் சாதிப்பது இல்லை! குறைபாடுகள் நிறைந்த பாடதிட்டம், எளிதான கேள்விதாள்கள், மதிப்பெண்களை அள்ளி வழங்குதல், இப்படி பல காரணங்கள் தமிழகத்தின் கல்வி தரத்தை கேள்விகுறியாக்குகின்றன என்பது ஒரு வாதம். அது சரியே. ஆனால், இந்த நிலைக்கு என்ன காரணம்? வருடம்தோறும் அதிகரிக்கும் தேர்ச்சி விகிதம் அரசின் சாதனையாக பறைசாற்றப்படுகிறது. ஆட்சியாளர்கள் தங்களது சாதனை பட்டியளுக்காக மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுகிறார்கள், அவ்வளவே.  

o0O0o

ஆந்திர மாநில பிரிவினைக்கு பின், இரு மாநிலங்கள் இடையே நடைபெறும் ”பாகபிரிவினை” பங்காளி சண்டையினை போல் உள்ளது. முன்னால் ஆந்திர அரசின் சொத்துகள், கடன்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த அசாத்தியமான பணியினை  இதற்க்கென அமைக்கபட்ட கமிட்டிகள் திறம்பட நிறைவேற்றியுள்ளன. அரசு ஊழியர்கள் விவகாரத்தில், சீமந்தரா பகுதியில் பிறந்த மற்றும் படித்த ஊழியர்கள் ஆந்திர மாநிலத்திலும் தெலுங்கானா பகுதியில் பிறந்த மற்றும் படித்த ஊழியர்கள் தெலுங்கானா மாநிலத்திலும் பணிபுரிய வேண்டும் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், சீமந்திராவினர் சிலர் தங்கள் சொந்த செளகரியதிற்காக தெலுங்கானாவில் தொடர்ந்து பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு, தெலுங்கானாவிற்க்காக போராடியவரும் தெலுங்கானா மாநிலத்தின் முதல் முதல்வருமான சந்திரசேகர ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த அரசியலுக்கு தெலுங்கானாவிலும் ஆதரவு. காவிரிநீர் பங்கீடு, முல்லை பெரியாறு அணை அல்லது மும்பையில் வேற்று மாநிலத்தினருக்கான எதிர்ப்பு போன்ற விவகாரங்கள் ஏதோ புரிகிறது. ஆனால், ஒரே தாய்மொழியை பேசிக்கொண்டு இவ்வளவு காலமாக தங்களை ஒரு மாநிலத்தினராக அடையாளப்ப்டுத்தி கொண்டிருந்த இவர்களிடையே இப்படியொறு குரோதத்தை எப்படி விதைக்க முடிந்தது? புரியவில்லை!!!  

No comments:

Post a Comment